வாரணம் ஆயிரம் விளக்கம்
தெரிந்த கதை தெரியாத வரலாறு.
கோதை நாச்சியார் என்றழைக்கப்படும் ஆண்டாள் நாச்சியார் தனது நாச்சியார் திருமொழியில் ஆறாம் பத்து பாடலில்,
வாரணம் ஆயிரம் புடை சூழ நாரணன் நம்பி நடக்கின்றான் என்று ஒரு பாடல் எழுதியுள்ளார்.
வாரணம் ஆயிரம் அதாவது ஆயிரம் யானைகள் புடைசூழ தன்னை கண்ணன் மணப்பெண்ணாக ஏற்றுக்கொள்வதாக வரும் பாடல் .இதில் ஆண்டாள் ஆயிரம் யானைகள் என்று ஏன் குறிப்பிட்டார்?? என்ன காரணம் ??என்ன கணக்கு ??ஏதோ பேச்சுக்கு சொல்வதென்றால் 100 200 என்று குறிப்பிட்டு இருக்கலாமே!. குறிப்பாக ஆயிரம் என்று சொல்வதற்கு என்ன அர்த்தம் .பெரியவர்கள் அதுவும் ஆண்டாள் போன்ற சிறந்தவர்கள் ஏதாவது தவறாக குறிப்பிடுவார்களா!! அதற்கான காரணம் என்ன என்பதை சற்று விரிவாக விளக்கமாக பார்ப்போமா!!??
கோதை என்று பெரியாழ்வாரால் செல்லமாக அழைக்கப்படும் பெண் ஆண்டாள். சிறுவயது தொட்டே பெரியாழ்வார் பக்தி கதைகளையும் இதிகாசங்களையும் புராணங்களையும் ஒரு வரி விடாமல் தன் பெண்ணிற்கு கூறிக் கூறியே அவளை வளர்த்துள்ளார். அதன் காரணமாக பருவ வயது அடைந்த பின்பு கோதை நாச்சியார் மானிடர்க்கென்று வாழ்கிலேன் மணந்தால் அந்தக் கண்ணனையே மணப்பேன் என்று மனதில் வைராக்கியம் கொண்டு அந்தக் கண்ணனைப் பற்றியே சதா சர்வகாலமும் எண்ணிக் கொண்டு அவனுக்கு மாலை சூடி, சூடிக்கொடுத்த சுடர்க்கொடி என்ற பெயரையும் வாங்கியுள்ளார்.
அவ்வாறு இருக்கையில் ஒரு நாள் அவள் ஒரு கனவு காண்கிறார். அதாவது கண்ணன் தன்னை மணமுடிக்க வருவதாகவும் ஆயிரம் யானைகளுடன் (வாரணம் ஆயிரம்) வந்து அவனைப் பூரண கும்பத்துடன் வரவேற்று மணமேடைக்கு அழைத்துச் செல்வதாகவும் அந்த பாடலில் கூறியுள்ளார் இதில் ஆயிரம் யானை என்பதற்கான விளக்கம் தான் நமக்குத் தேவை. அதை காண்போம்.
சீதா ,ராமன், திருமணம் முடிந்து அவர்கள் அயோத்தி கிளம்பும் பொழுது ஜனக மகாராஜா தன் பெண்ணுக்கு சீதனமாக 600 யானைகளுடன் சீர்வரிசை அனுப்புகிறார். இது ஏற்கனவே ஆண்டாள் அறிந்தது .அப்படி இருக்க , வாரணம் 600 என்றுதானே கூறியிருக்க வேண்டும் .ஆனால் கோதை நாச்சியார் ராமன் கதையைப் படித்த பின்பு, கண்ணன் கதையைப் படிக்க, கும்பர் தன் பெண்ணான நப்பின்னையை கண்ணனுக்கு திருமணம் செய்து கொடுக்கும் பொழுது அவர் சீர்வரிசையாக 400 யானைகளையும் பரிசுப் பொருட்களுடன் அனுப்புகிறார். இந்த விவரத்தை வைத்துதான் கோதை நாச்சியார் சீதையின் சீர் வரிசையையும் நப்பின்னையின் சீர் வரிசையையும் இணைத்து (600 + 400=1000) ஆயிரம் ஆனவுடன் கண்ணன் தன்னை மணமுடிக்க ஆயிரம் யானைகளுடன் வருவதாக கற்பனை செய்துகொண்டு கனாக் கண்டு கொண்டு வாரணம் ஆயிரம் என்று எழுதியுள்ளார்.
பெரியவர்கள் ஏதாவது கூறினால் அதில் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கும் .சும்மா நாம் அவர்கள் பேச்சை ஒதுக்கவோ, கிண்டல் கேலி செய்வதோ கூடாது. ஆழ்ந்து யோசித்து அதற்கான விடை கண்டுபிடிக்க வேண்டும்.
இதுவரை படித்தமைக்கு நன்றி நன்றி நன்றி
நாளை வேறு ஒரு வரலாறு உடன் சந்திப்போம்.
Comments
Post a Comment