பெற்றோர் சொல் கேட்க வேண்டும்
இந்தக் காலத்து பிள்ளைகள் பெற்றோர்கள் ஏதாவது சொன்னால் கோபித்துக் கொள்கிறார்கள். பெற்றோருடன் சண்டை போடுகிறார்கள். அதனால் விளைந்த விளைவும் இறுதியில் என்ன நடந்தது என்பதையும் ஒரு சிறு கதை மூலம் விளக்கலாமா???
ஒரு பெற்றோர் தங்கள் மகனிடம் ஒழுக்கமாக ,இரு நன்றாக படி ,பொய் பேசாதே, கெட்டவர்களுடன் சேராதே, தொலைக்காட்சி பார்க்காதே ,என்று அடிக்கடி புத்திமதி சொல்லி வந்தார்கள். பயங்கர உபதேசம் செய்வதே இவங்களுக்கு பொழப்பா போச்சு, நினைத்து வேண்டாத நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு அவர்கள் அறிவுரைப்படி பெற்றோர்களை வெறுத்து விட்டான்.
ஒருமுறை அந்த மகனுக்கு கடுமையான காய்ச்சல் வந்தது .நண்பர்கள் உற்றார் உறவினர்கள் யாருமே அருகில் வரவில்லை .பெற்றோர் மட்டும் அக்கறை எடுத்து அவனை மருத்துவமனையில் சேர்த்தனர் .அங்கிருந்து நர்சுகள் அவனிடம் அன்பாக பேசி மருந்து கொடுத்தனர் .சரியான நேரத்திற்கு உணவு ஊட்டினர்.அன்பாகவும் பாசமாகவும் அவனுடன் பேசினர். தன்னை நன்றாக கவனித்துக் கொண்ட நர்சுகளை அவனுக்கு மிகவும் பிடித்துவிட்டது.
இரண்டு நாளில் நோய் குணமாகி வீட்டுக்கு கிளம்பிக் கொண்டிருந்தான். அப்பொழுது தன் பெற்றோரிடம் இந்த மருத்துவமனையில் உள்ள நர்சுகள் என் மேல் எவ்வளவு அன்பும் அக்கறையும் செலுத்துகிறார்கள். நீங்கள் அதுபோல் அன்பு செலுத்துவது இல்லையே என்று அவர்களை குறை கூறினான்.அவர்கள் ஒன்றும் பேசாமல் அமைதியாக சிரித்துக் கொண்டு நின்றனர்.
அப்பொழுது ஒரு நர்ஸ் ஓடிவந்து அவனது தந்தையிடம் பில்லை நீட்டினார் .அவன் என்னப்பா அது என்று கேட்டான்..அதற்கு அவர் மகனே உன் மேல் இத்தனை நாள் நர்சுகள் அன்பு காட்டினார்கள் அல்லவா!! அதற்கான விலை இது என்று கூறினார். அவன் முகம் அஷ்ட கோணலாகி ஒன்றும் கூறாமல் அமைதியாக தாய் தந்தையரின் காலில் விழுந்து தன்னை மன்னிக்குமாறு வேண்டினான்.
எப்பொழுதுமே ஒரு பழமொழி கூறுவார்கள். மூத்தோர் சொல்லும் முது நெல்லிக் காயையும் முன்னே கசக்கும் பின்னே இனிக்கும் என்று.அது இவன் விஷயத்தில் தெள்ளத் தெளிவாகி விட்டது.
Comments
Post a Comment