ஏழு ஜென்மாவிலும் தொடர்ந்து வாழ வேண்டும் என்ற எண்ணம்

தெரிந்த கதை தெரியாத வரலாறு

இன்று நாம் காண இருப்பது  எத்தனை பிறவி எடுத்தாலும் கணவன்-மனைவி சேர்ந்திருப்பார்கள். ஏழு ஜென்மாவிலும் சேர்ந்திருப்பார்கள் 7 முறைதான் பிறவி வரும் 7லிலும் உன் மீது காதல் வரும்.ஏழு பிறவியிலும் உன்னுடன் தான் வாழ வேண்டும் என்றெல்லாம் சொல்வார்கள் .அது என்ன ஏழு பிறவி. ஏன் அவ்வாறு 7 ஜென்மாவிலும் தொடர்ந்து வாழ வேண்டும் என்பதைப் பற்றி சற்று விரிவாக விளக்கமாக பார்ப்போமா!!.

இதைப்பற்றி குறையொன்றுமில்லை யில் முக்கூர் லட்சுமி நரசிம்மாச்சாரியார் கூறியிருக்கிறார் .என்னுடைய கருத்து சிறிது மாறுபடும்.காரணம் நான் வேறு ஒரு புராணத்திலும் படித்திருப்பதால். அவருடைய கருத்தை  மேக்ஸிமம் ஒதுக்காமல் கூடியவரை அனைத்து தகவலையும் தர முயற்சிக்கிறேன்.

முதல் ஏழு பிறவி என்பது என்னென்ன என்று சற்றுப் பார்ப்போமா.

1.குள்ளநரி 2. ஓநாய் 3.செந்நாய் (சிவந்த நாய்) 4. கொக்கு 5. காகம் 6.. மயில். 7.மனிதப்பிறவி.

இனி இது என்ன எவ்வாறு என்று கதையில் பார்ப்போம்.

சததனு  என்று ஒரு மஹாராஜா .அவருக்கு சைப்யை என்றொரு மனைவி .இருவரும் இனிமையான இல்லற வாழ்வு வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.சைப்யை  மகா பதிவிரதை. கற்புக்கரசி. கணவன் கிழித்த கோட்டை தாண்ட மாட்டாள். கணவனே கண்கண்ட தெய்வம்.அதை மீறி  வேறுஒன்றுமில்லை என்று வாழ்பவள். அவர்களுக்கு ஒரு கைக்குழந்தை.

ஒருநாள் கணவனுக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தாள் .அன்று உணவு உண்டு விட்டு சததனுக்கு சற்று அயர்ச்சியாக இருந்த காரணத்தினால் அப்படியே அவள் மடி மீது சாய்ந்து உறங்கிவிட்டான் .கணவன் மடி மீது உறங்குவதால் ஒன்றும் செய்யமுடியாமல் அவனைத் தட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தாள். அவன் சிரமமில்லாமல் உறங்கட்டும் என்று !!!அந்த நேரத்தில் அவர்களது குழந்தை தவழ்ந்து வந்து கொண்டிருந்தது. அடுப்பில் நெருப்பு தக தக என்று எரிந்து கொண்டிருக்கிறது .இந்த குழந்தைக்கு நெருப்பு என்று தெரியாமல் அடுப்பின் அருகில் செல்கிறது .இவள் பார்த்துக்கொண்டிருக்கிறாள். கணவனோ உறங்குகிறான். இவளோ பதிவிரதை. கணவனின் தலையை எடுத்து கீழே போட்டுவிட்டு குழந்தையை காப்பாற்ற செல்லமுடியாது. குழந்தையோ நெருப்பின் அருகில் சென்று விட்டது. என்ன செய்வது என்று ஒன்றும் தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கும் பொழுது இவள் மனப்பூர்வமாக அக்னி பகவானை வேண்டுகிறாள். நான் பதிவிரதை என்பது உண்மையானால்  இந்த நெருப்புத் தணல் என் குழந்தையை தகிக்காமல் இருக்கட்டும் என்று வேண்டினாள்.குழந்தை நெருப்பில் சென்று கையை விடுகிறது. நெருப்பை எடுத்து மேலே போட்டுக் கொள்கிறது. அதற்கு ஒன்றும் ஆகவில்லை குளுகுளு என்றிருந்தது. அவள் உடனே அக்னி பகவானுக்கு நன்றி தெரிவித்தாள்.

சததனு மகாராஜா சிறந்த  விஷ்ணு பக்தன் .ஏகாதசி விரதம்  தவறாமல் அனுஷ்டிப்பவர். (ஏகாதசி மகிமையைப்பற்றி பாகவதத்தில் அம்பரீசன் ஏகாதசி விரதத்தினால் அடைந்த பலனைப் பற்றி அறிவோம். தெரியாதவர்களுக்கு அம்பரீஷன் கதையை நான் தனியாகப் பதிவிடுகிறேன்.)

ஒருமுறை இவர்கள் ஏகாதசி விரதம் அனுஷ்டித்து விட்டு கணவனும் மனைவியும் வந்து கொண்டிருக்கிறார்கள். அப்பொழுது சததனுவின்  குருவின் புதல்வன் குதிரையில் வந்து கொண்டிருக்கிறான். குருவின் புதல்வன் சாத்திரம் சடங்கோ ஆச்சாரத்தையோ குல தர்மத்தையோ ஒன்றையும் கடைப்பிடிப்பவன் அல்ல .அனைத்திற்கும் விரோதி .அவ்வாறு வந்து கொண்டிருப்பவன் குருவின் மைந்தன் என்ற காரணத்தினால் மகாராஜா  அவனைப் பார்த்து எப்படி இருக்கிறாய் எவ்வாறு இருக்கிறாய் என்று வினவினார் .அங்கே பிடித்தது சனி .ஆனால் சைப்யை  அவனைப் பார்த்ததும்  உடனே சூரியனைப் பார்த்தாள் நதியைப் பார்த்தாள் பூமியைப் பார்த்தாள் தூரத்தில் தெரியும் பசுவைப் பார்த்தாள்.ஒரு சாஸ்திரம் சமூகத்துக்கு விரோதமான செயல்களில் ஈடுபடுபவனைப் பார்த்தால் தோஷம் நமக்குப் பிடிக்காமல் இருக்க சூரியனையோ  பூமியையோ நதியையோ நீரையோ பசுவையோ பார்த்தால் தோஷம் விலகி விடும் என்று கூறுகிறார்கள் .ஆகவே அவளுடைய தோஷம் விலகி விட்டது. ஆனால் சததனுவைப் பற்றிக்கொண்டது அதன் விளைவு.

இவர்கள் அரண்மனை சென்று சில தினங்களில் அந்த தோஷத்தின் காரணமாக மகாராஜா இறந்து விட்டான். இவள் மகா பதிவிரதை உடனே கணவனுடன் உடன்கட்டை ஏறிவிட்டாள்.

இவள் அடுத்த ஜென்மத்தில் காசிராஜனுக்கு மகளாக சுமதி என்ற பெயரில் பிறந்தாள். வயது வந்தவுடன் இவள் மகா பதிவிரதையான காரணத்தினால் இவளுக்கு போன ஜென்ம ஞாபகம் அனைத்தும் இருந்தது. தான் முற்பிறவியில்  சைப்யையாக இருந்ததாகவும் தனது கணவன் சததனு மஹாராஜா என்றும் அவளுக்கு நினைவு வந்தது. ஏழு ஜென்மத்திலும்  பதிவிரதை களுக்குள்  அதே கணவன்மார்கள் தான் வாய்ப்பார்கள் என்ற காரணத்தினால் தற்சமயம் தன் கணவன் எங்கு  எப்படி  பிறந்து இருக்கிறான் என்பதைக் காண நேர்ந்தது. தன் கணவன் ஒரு குகையில்  குள்ள நரியாக
பிறந்து இருப்பதை கண்டாள்.

இவள் உடனே அந்த குகையின் அருகில் சென்றாள் .குள்ளநரி எவ்வளவு சூட்டையும் தாங்கும் .ஆனால்  தென்றல் காற்று குளிர்ந்த காற்றை தாங்குவதற்கு அதன் உடலில் வலுவில்லை .குளிர்ந்த காற்று வீசினால் குகையில் ஓரத்தில் சென்று சுருண்டு படுத்துக்கொள்ளும் .அன்று பயங்கரமாக குளிர்ந்த காற்று வீசியதின் காரணமாக குகையில் ஓரத்தில் இவளுடைய கணவனான குள்ளநரி சுருண்டு படுத்துக் கிடந்தது . குகையின் அருகில் சென்று நான் தங்களது மனைவி சைப்யை  வந்திருக்கிறேன் தாங்கள் வெளியே வாருங்கள் என்று கூறினாள். அது கேட்ட மறுகணமே குள்ளநரி இறந்துவிட்டது. அடுத்த பிறவியில் ஓநாயாக பிறந்தது . இவள் அதனருகில் சென்று அவ்வாறு கூற அதுவும் இறநதது .மறுஜென்மத்தில் செந்நாய் ஆக பிறந்தது.அதன் இடமும் கூட இறக்க அடுத்த ஜென்மத்தில் கொக்காக பிறக்க அதனிடம் சென்று கூற அதுவும் இறக்க அடுத்த ஜென்மத்தில் காக்கா வாக பிறந்தது.

இவள் உடனே காக்காவிடம் சென்று நீங்கள் பலிபுக்காக இருந்தீர்கள் என்று கூறினாள். பலிபுக் என்றால் முன்னோர்களுக்கு பலி கொடுப்பதற்கான பிண்டத்தை காக்காய்க்கு படைப்பார்கள் .கோவிலில் பலிபீடத்தின்மேல் பிண்டத்தை வைத்தும் கா கா என்று கூறுவார்கள் இவ்வாறு கூறுவதற்கு பலிபுக் என்று ஒரு அர்த்தம் .இது ஒரு அர்த்தம் .வேற ஒரு அர்த்தம் நீங்கள் போன ஜென்மத்தில் மகாராஜாவாக இருந்து சிற்றரசர்களிடம் கப்பம் என்ற பெயரில் பலி வாங்கி அரசாட்சி செய்து கொண்டிருந்தீர்கள் பலிபுக்காக இருந்தீர்கள் என்று இரட்டுறமொழிதலில் கூறினாள் அதுகேட்டு காக்க உயிரை விட்டது. அடுத்த ஜென்மத்தில் மயிலாக பிறந்தது.

இவள் அந்த மயிலை தன்னுடனே வைத்து வளர்த்து வந்தாள் .அப்பொழுது மிதிலையில் ஜனக மகாராஜா ஒரு யாகம் மேற்கொண்டிருந்தார். இவளையும் அழைத்தார்கள் .யாகத்தில் கலந்து கொண்டாள். அந்த யாகத்தில் உண்டான அபிஷேக தீர்த்தத்தால் அனைவருக்கும் அபிஷேகம் செய்யவேண்டும் என்ற ஒரு சூழ்நிலை ஏற்பட்டது. இவள் மகா பதிவிரதை என்ற காரணத்தால் இவள் மயிலுடனே அந்த அபிஷேக தீர்த்தத்தை பெற்றுக்கொண்ட உடனே மயில் இறந்து ஜனக மகாராஜா விற்கு பிள்ளையாக பிறந்தது.

இவள் சுமதி என்ற பெயரிலேயே வாழ்ந்து வந்தாள்..ஜனக மகாராஜாவின் குழந்தைக்கு இரண்டு மூன்று வயது ஆனவுடன் இவள் அந்தக் குழந்தையிடம் சென்று தாங்கள் சததனு மஹா ராஜாவாக இருந்தீர்கள் .இதற்கு முன்பு 6 பிறவியிலும் நான் உங்களை கணவனாக ஏற்றுக் கொண்டேன். தற்போது தங்களது ஏழாவது பிறவி. பதிவிரதை பத்தினிகளுக்கு ஏழு பிறவி தானுண்டு .ஏழு பிறவியிலும் அதே கணவன் வாய்ப்பார். இந்த ஜென்மத்தில் தாங்களே என் கணவர் என்று சொல்ல சிறு குழந்தையாய் இருந்த போதிலும் பதிவிரதா தன்மை போகக்கூடாது என்ற காரணத்தினால் அந்த குழந்தையை இவளுக்கு திருமணம் செய்து வைத்தார்கள். உடனே திருமணமாகி சில நாட்களில் இருவரும் இறந்து ஒன்றாக சொர்க்கம் சென்றார்கள். இதுவே பதிவிரதத் தன்மையின் மகிமை. இதுவே ஏகாதசி விரதத்தின் மகிமை. இதுவே ஏழு பிறவியிலும் சேர்ந்து இருப்பதின் பலன்.

இதுவரை ஏழு பிறவி என்றால் என்ன? அதனுடைய பிறவி என்னென்ன ?பத்தினிகளின் தன்மை என்ன? ஏகாதசி விரதத்தின் மகிமை என்ன? அனைத்தையும் பார்த்தோம்.

இதுவரை படித்தமைக்கு நன்றி நன்றி நன்றி

நாளை வேறு ஒரு வரலாறுடன் சந்திப்போம்.

தகுந்த ஃபோட்டோ கிடைக்கவில்லை.மன்னிக்க வேண்டுகிறேன்

Comments

Popular posts from this blog

மாசாணி அம்மன் வரலாறு

யாயும் ஞாயும் யாராகியரோ

முருகனின் அவதாரங்கள்