திருவாதிரை களி தோன்றிய கதை
தெரிந்த கதை தெரியாத வரலாறு
.
மார்கழி மாதம் பவுர்ணமியன்று திருவாதிரை நட்சத்திரத்தில் நாம் சிவபெருமானுக்கு திருவாதிரைக்களி செய்வோம் .அதனுடைய சரித்திரத்தைப் பார்ப்போமா.
சேந்தனார் என்ற சிவபக்தர் சிதம்பரத்தில் தன் மனைவியுடன் வசித்து வந்தார் .தினமும் உணவு உண்பதற்கு முன் சிவனடியார்களுக்கு உணவு இடாமல் தான் என்றும் உண்ணமாட்டார். ஒருமுறை பலத்த மழை பெய்து விறகெல்லாம் நனைந்து விட்டது.
அதேநேரம் கணவனுக்கும் மனைவிக்கும் மனதில் பயம் வந்துவிட்டது .இந்த நேரத்தில் யாராவது சிவனடியார்கள் வந்து உணவு வேண்டும் என்று கேட்டால் என்ன செய்வது. வீட்டில் உள்ள விறகு எல்லாம் ஈரமாக உள்ளது. மேலும் எங்கும் காய்ந்த விறகு இல்லை என்று யோசித்துக் கொண்டிருந்தார்கள்.
இவர்களுக்கு சோதனையாக அந்த நேரம் பார்த்து ஒரு சிவனடியார் அவரது இல்லத்திற்கு வந்து சேர்ந்தார். அதுவும் அவர் பார்ப்பதற்கு நன்கு தேஜஸுடன் நல்ல ஜடாமுடி எல்லாம் தரித்து அம்சமாக சூரிய ஒளி தேஜஸுடன் காணப்பட்டார்.
தம்பதிகளுக்கு கை கால் உதறியது. வந்தவரை வெறும் வயிற்றுடன் அனுப்பவும் முடியாது .அதே நேரம் அரிசியை உலையில் இட்டு செய்தால் இந்த விறகால் எதுவும் செய்ய முடியாது. என்ன செய்யலாம் என்று ஒரு நிமிடம் யோசித்து அரிசி உளுந்து மாவுடன் வெல்லமும் நெய்யும் கலந்து ஈர விறகை ஒருவாறு பற்றவைத்து ஊதி ஊதி குறைந்த நெருப்பிலேயே களி தயாரித்துவிட்டார். அதை சிவனடியாருக்கு அன்றைய தினம் படைத்தார் .அன்று மார்கழி மாதம் பவுர்ணமி திதி திருவாதிரை நட்சத்திரம்.
வந்தவர் அதை சாப்பிட்டுவிட்டு தினமும் தயிர் சாதம் புளியோதரை சர்க்கரைப் பொங்கலும் சாப்பிட்டு சாப்பிட்டுப் போன எனக்கு நீங்கள் அளித்த இந்த களி பிரமாதமாக இருந்தது என்று பாராட்டி நீங்க நன்னா இருப்பேள்ன்னு சொல்லிவிட்டு போய்விட்டார். என்னடா இது ஒரு சாதாரண களியை இந்த அளவுக்கு பாராட்டி இருக்கிறார் என நினைந்து அவரும் மனைவியும் ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தார்கள்.
காலை பொழுது விடிஞ்சதும் அவங்க எந்திரிச்சு எப்போதும் போல குளித்துவிட்டு கோவிலுக்கு தில்லையம்பலம் நடராஜரைத் தரிசிக்க சிதம்பரத்துக்கு போனார்கள் கர்ப்பகிரகத்திற்கு முன்னாடி இருந்து பார்த்தா எல்லா இடத்திலும் இவங்க சென்ற வழியெல்லாம் களி கொட்டிக்கிடக்கிறது.என்னடா வழியெல்லாம் களி சிந்தி இருக்குன்னு பாத்துட்டு நேராக சிதம்பரம் நடராஜரை தரிசிக்க சென்றார்கள். அங்கு பார்த்தால் அவர் வாயிலும் களி ஒட்டிக்கொண்டிருந்தது.
உடனே உணர்ச்சிப்பெருக்குடன் ஆகா எம்பெருமானே தாங்களா நேற்றிரவு என் வீட்டிற்கு களி திங்க வந்தது. வந்தனம் வந்தனம் என்று தடால் என்று அவர் பாதத்தில் விழுந்து நமஸ்கரித்தனர். உடல் புல்லரித்தது .உடனே சிவபெருமான் நான் நேற்று இரவு தங்கள் வீட்டில் தின்ற களியால் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன் என்று கூறினார். அது மட்டுமல்ல இந்த மார்கழி மாதத்தில் பவுர்ணமி திதியில் திருவாதிரை நட்சத்திரத்தில் எனக்கு களி செய்து யார் யார் படைக்கிறார்களோ அவர்களுடைய குடும்பத்தில் எந்தவிதமான கஷ்டமும் இல்லாமல் அவர்களுக்கு சகல சவுபாக்கியங்களையும் நான் அருள்வேன் என்று சிவபெருமான் கூறினார்.
இதுவே திருவாதிரைக்களி தோன்றிய வரலாறு
இதுவரை படித்தமைக்கு நன்றி நன்றி நன்றி
நாளை வேறொரு வரலாறுடன் சந்திப்போம்
Comments
Post a Comment