உஜ்ஜயினி மஹாத்மியம்
காலம் பிறக்கும் நகரமான உஜ்ஜயினியின் ரகசியம்
புகழோங்கிய பண்டைய பாரதத்தில் அபூர்வ நகரமாக விளங்கியது உஜ்ஜயினி. இந்த நகரைப் பற்றிய ஏராளமான அதிசயக்கத்தக்க உண்மைகள் உள்ளன. காலம் பிறப்பது இங்கே தான் என்பது முதல் ரகசியம். சூரிய பாதையில் தீர்க்கரேகை செல்லும் ஒரு முக்கிய கேந்திரமாகத் திகழ்கிறது உஜ்ஜயினி. இந்த முக்கிய கேந்திரத்தின் முக்கிய புள்ளியைக் கண்டு பிடித்த நம் முன்னோர் சரியாக அந்தப் புள்ளியில் மகா காலேஸ்வரரின் லிங்கத்தை ஸ்தாபித்தனர். ஸ்ரீ லங்காவிலிருந்து புராணம் விவரிக்கும் மேருவிற்கு செல்லும் தீர்க்க ரேகை உஜ்ஜயினியை ஊடுருவிச் செல்கிறது.ஹிந்து வானவியல் நிபுணர்களின் க்ரீன்விச் உஜ்ஜயினி நகரம் தான்! கலைகள் அனைத்தையும் கற்பிக்கும் கலை பூமியாகத் திகழ்ந்த இந்த நகரத்தில் தான் உஜ்ஜயினி மஹாகாளியின் அருள் பெற்ற விக்கிரமாதித்தன் அரசோச்சி வந்தான்.இங்கே உள்ள வானவியல் கட்டிடங்கள், மஹாகாலேஸ்வரர் ஆலயம், நவகிரஹ ஆலயம் முதலிய இடங்களை விளக்கத் தனி நூல் தான் எழுதப்படவேண்டும்!
ஏழு மோட்சபுரிகளுள் ஒன்று
‘அயோத்யா மதுரா மாயா காசி காஞ்சி அவந்திகாபுரீ த்வாராவதீசைவ சப்தைதா: மோக்ஷதாயிகா’ என்ற சுலோக கூற்றின் படி அவந்தி ஏழு மோட்சம் தரும் இடங்களில் ஒன்று என்பது அடுத்த ரகசியம். 12 ஜோதிர்லிங்கங்களில் முக்கியமான லிங்கம் அவந்தியிலேயே அமைந்துள்ளது. இதன் தலை நகரமான உஜ்ஜயினி கிறிஸ்து பிறப்பதற்கு வெகு காலத்திற்கு முன்பேயே அனைவரையும் தன் பக்கம் ஈர்த்த புண்ணிய பூமி! இந்த அபூர்வ பூமியின் வரலாறில் புதைந்துள்ள இன்னொரு ரகசியம் தான் அதிசய ஜோதிட மேதை வராஹமிஹிரரின் வரலாறு!உஜ்ஜயினியில் தான் வராஹமிஹிரர் வளர்ந்தார்;வாழ்ந்தார்; அந்த நகருக்கு ஒரு புதிய அந்தஸ்தையும் தன் ஜோதிட ஆற்றலினால் தந்தார்!
வராஹமிஹிரர் என்ற பெயர் வரக் காரணம்
வராஹமிஹிரர் என்ற பெயர் அவருக்கு வந்ததற்கு காரணமே ஒரு சுவாரஸ்யமான ஜோதிட நிகழ்வு தான்! உஜ்ஜயினியில் ஆதித்ய தாஸர் என்ற அந்தணருக்கு மகனாகப் பிறந்தவர் வராஹமிஹிரர். சூரியனை நன்கு வழிபட்டு வந்த தந்தையிடமிருந்து ஜோதிடத்தை நன்கு கற்றுணர்ந்தார் அவர்.
விக்கிரமாதித்தன் அரசவையில் நவரத்தினங்களாக பெரும் அறிஞர்கள் ஜொலித்தனர். அந்த நவரத்தினங்களுள் ஒருவர் வராஹமிஹிரர். ஒரு சமயம் மன்னனுக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அரசன் வராஹமிஹிரரை அழைத்து ராஜகுமாரனின் ஜாதகத்தைக் கணித்துப் பலன்களைக் கூறுமாறு வேண்டினான்.மிக கவனமாக ஜாதகத்தைக் கணித்து அந்த ஜாதகத்திற்குரிய பலனை வராஹமிஹிரர் சிந்தித்து உணர்ந்தார்.மன்னனை நோக்கிய அவர், “அரசே! இந்த ராஜகுமாரனுக்கு அற்ப ஆயுளே உள்ளது. இவனது பதினெட்டாம் ஆண்டில் இவனுக்கு ஒரு பன்றியால் மரணம் ஏற்படும். அதை யாராலும் தடுக்க முடியாது” என்று வருத்தத்துடன் கூறி அவன் இறக்கவிருக்கும் நாள் மற்றும் மாலை நேரத்தில் எந்த மணியில் அது சம்பவிக்கும் என்பதையும் குறிப்பிட்டுக் கூறினார்.
அரசன் திடுக்கிட்டான். தனது அருமை மந்திரி பட்டியை அழைத்து ஆலோசித்தான். பட்டியின் ஆலோசனையின் பேரில் ராஜகுமாரனுக்காக 80 அடி மதில் சுவர் உள்ள ஒரு பிரத்யேகமான அரண்மனை கட்டப்பட்டது. அதைச் சுற்றி ஆயிரக்கணக்கான வீரர்கள் காவலுக்கு நிறுத்தப்பட்டனர். பன்றி என்ற மிருகமே தொலை தூரத்திற்கும் இல்லாதபடி பன்றிகள் அழிக்கப்பட்டன. ராஜகுமாரனுக்கு அனைத்துப் பயிற்சிகளும் அரண்மனைக்குள்ளேயே அளிக்கப்பட்டதால் அவனுக்கு வெளியில் செல்ல வாய்ப்பே இல்லை ஆண்டுகள் உருண்டோடின. மன்னன் ராஜகுமாரனின் பதினெட்டாம் ஆண்டில் வராஹமிஹிரர் குறிப்பிட்ட மாதத்தில் குறிப்பிட்ட நாளில் அவரை அழைத்தான். “கடந்த ஆண்டுகளில் நான் செய்த காவல் திட்டத்தைக் கவனித்திருப்பீர்கள். இப்போது சொல்லுங்கள். என் பையனுக்கு ஒன்றும் நேராது அல்லவா?” வராஹமிஹிரர் வருத்தத்துடன். “அரசே! விதியை யாராலும் வெல்ல முடியாது. இன்று மாலை ராஜகுமாரனுக்கு பன்றியின் மூலம் மரணம் நிச்சயம் “ என்று கூறினார்.
மன்னன் உடனே தன் மெய்காவலர்களை அழைத்து ஒவ்வொரு மணி நேரமும் ராஜகுமாரனின் நிலை பற்றி எனக்கு அறிவியுங்கள்” என்று ஆணையிட்டான். மாலையும் கடந்தது. கடைசியாக மன்னனுக்கு வந்த செய்தியின் படி அவன் தனது அறையில் மற்ற சகாக்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். மன்னன் வராஹமிஹிரரை அழைத்து. “உங்கள் தோல்வியை ஒப்புக்கொள்ளுங்கள்” என்றான். வராஹமிஹிரரோ துக்கத்துடன் ராஜகுமாரன் இறந்து சிறிது நேரம் ஆகி விட்டது. வாருங்கள். அவன் அரண்மனைக்குப் போகலாம்” என மன்னனை துரிதப் படுத்தினார். கலங்கிய மன்னன் அரண்மனைக்கு விரைந்தான். அங்கே ராஜகுமாரனின் அறையில் அவனைக் காணோம்.
அனைவரும் பரபரப்புடன் தேடினர். கடைசியில் அரண்மனையின் ஏழாவது மாடியில் ரத்த வெள்ளத்தில் ராஜ குமாரன் இறந்து கிடந்ததைப் பார்த்து மன்னன் உள்ளிட்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். நடந்தது இது தான்: நெடுநேரம் தன் அறையில் இருந்த ராஜகுமாரன் விதி ஆணையிட்ட அந்த சமயத்தில் மேல்மாடிக்குச் சென்றிருக்கிறான். அரண்மனை கோபுரத்தின் உச்சியில் ராஜ இலச்சினையான பன்றி இலச்சினை கொடிக்கம்பத்தில் இணைக்கப்பட்டிருந்ததுஅங்கு அது வரை கண்டிராத பலத்த காற்று வீசவே அது ஆடி ராஜகுமாரன் மீது விழவே அதனால் வெட்டுண்டு ராஜகுமாரன் மரணமடைந்தான்.
எண்பது வயது வாழ்ந்த ஜோதிட மேதை
வராஹத்தின் மூலம் அதாவது பன்றியின் மூலம் மரணம் வருவதைச் சொன்ன இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் அவர் வராஹமிஹிரர் என அழைக்கப்படலானார்! அவர் வாழ்ந்த 80 ஆண்டுகளும் உலகினரால் அவர் பெரிதும் மதிக்கப்பட்டார்.
வராஹமிஹிரர் ஜோதிடக் கலையை தனது கூரிய அறிவின் மூலமாக ஒரு உன்னதமான ஸ்தானத்தில் ஏற்றி வைத்தார்.அவர் இயற்றிய பல நூல்கள் இன்றும் ஆச்சரியத்தை விளைவிக்கும் அபூர்வ நூல்களாக இலங்குகின்றன. நவீன விஞ்ஞானிகளே மலைக்கும் அவரது கணித அறிவும், வானியல் அறிவும் பிரமிக்க வைப்பவை! இத்தோடு ஜோதிட அறிவையும் . உலகியல் அறிவையும் மனித குலம் மீது அவருக்குள்ள பரந்துபட்ட மனிதாபிமானத்தையும் அவரது நூல்கள் மூலம் காண முடியும்.
இந்த வராஹிரருக்கு ஒரு சோதனை தன் மகள் மூலம் வந்தது. ஊருக்கே ஜோஸ்யம் சொல்பவர் ஒரு நாள் தன் மகளின் ஜாதகத்தை கணித்தார். அதன் படி பெண்ணுக்கு திருமணம் ஆன உடனே மரணம் என்று உள்ளது.அவர் மிகவும் மனம் வருந்தி ஏதாவது செய்ய வேண்டுமே என்று நினைத்து (அந்தக் காலத்தில் கடிகாரம் முதலியன கிடையாது) ஆனால் துல்லியமாக நேரம் அறிய இந்தக் காலத்து தண்ணி கேன் போல ஒரு குடுவையை உருவாக்கி அதில் ஒரு துவாரத்தை ஏற்படுத்தி விழும் நீரை வைத்து நேரத்தை கணக்கிட்டார்
அதன்படி குறித்த நேரத்திற்கு ஒரு ரெண்டு மணி நேரம் முன்னதாக திருமணம் நடந்தால். அந்த தோஷம் நிவர்த்தியாகும் என்று கணித்தார் . அதன்படி பெண்ணுக்கு திருமணம் செய்து முடித்தார் ஆனால் அந்த குறிப்பிட்ட நேரத்தில் பெண் மாண்டாள்..
இவருக்கு ஒன்றும் புரியவில்லை என்ன காரணம் என்று ஆராய்ந்தால் திருமணத்திற்கு சில நாட்கள் முன்பு பெண் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்று முடிவு செய்து அதன் படி தோடு மூக்குத்தி முதலியவைகளை கழற்றினாள். அவள் மூக்குத்தியைக் கழட்டும் போது அதன் திருகாணி கழண்டு அந்த குடுவையின் துவாரத்தில் சிக்கிக் கொண்டது.
ஆதலால் ஒரு சொட்டு என்று இவர் கணக்கிடும் நேரம் தவறியது. அதன் விளைவாக தான் இது நேர்ந்தது என்று முடிவு செய்து அனைத்தும் தெய்வ சங்கல்பம் நம் கையில் ஒன்றும் இல்லை விதி வலியது என்று கூறினார்.
இது வரை படித்தமைக்கு நன்றி நன்றி
நாளை துவாரகை மஹாத்மியம ருக்மணி தேவி ஆலயம் பற்றி பார்ப்போம்.
Comments
Post a Comment